முதல் பக்கம் | ஆசிரியருக்கு மடல் | முந்தைய இதழ்கள் | தேவதை | திரிசக்தி | முகவரி

 Untitled Document

நிதியில்லாமல் நீதியில்லை!
திருவாரூர் மாவட்ட நீதிபதி மீது திடுக் புகார்




சில வாரங்கள் முன்பு மயிலாடுதுறை தொகுதி அ.தி.மு.க. எம்.பி.யான ஓ.எஸ்.மணியன் உள்கட்சித் தேர்தல் விவகாரத்தில் அ.தி.மு.க.வினராலேயே தாக்கப்பட்டார். இந்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பை விட...

‘‘என்னைத் தாக்கியது தொடர்பான வழக்கை திருவாரூர் மாவட்ட நீதிபதி சந்திரசேகரன் விசாரித்தால் அது நீதிக்கு உகந்ததாக இருக்காது. எனவே அவர் விசாரிக்க தடைவிதிக்க வேண்டும்’’ என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.எஸ்.மணியன் மனு செய்ததுதான் நாகை மாவட்டத்தில் மட்டுமல்ல, நீதித் துறையிலும் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர். ரகுபதி, மணியனின் கோரிக்கையை ஏற்று தடையும் விதித்திருப்பது நீதித்துறையில் விவாத அலைகளை அதிகப்படுத்தியுள்ளது.

செஷன்ஸ் நீதிபதி சந்திரசேகரன் மீது அப்படியென்ன குற்றச்சாட்டு?

முதலில் ஓ.எஸ். மணியனிடம் பேசினோம். ‘‘என்னை தாக்கியது என் கட்சிக்காரர்கள் தான். பலர் கண் முன்னால் நடந்த அந்த அநீதிக்கு கட்சி மேலிடத்தில் அனுமதி பெற்று புகார் கொடுத்துள்ளேன். எதிரிகள் முன் ஜாமீன் கேட்டு இரண்டு முறை முயன்றும் நாகை மாவட்ட நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்டனர்.

இச்சூழ்நிலையில் நாகை செஷன்ஸ் நீதிபதி லட்சுமி நாராயணன் விடுமுறையில் சென்றுள்ளதால், திருவாரூர் செஷன்ஸ் கோர்ட்டு நீதிபதி ஜாமீன் மனுக்களை விசாரிக்க இருப்பதாக தெரியவந்தது.

அவர் மீது ஏற்கெனவே பல புகார்கள் கூறப்பட்டுள்ளது என் கவனத்திற்கு வந்துள்ளன. அதனால், ‘அவர் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்களை விசாரித்தால் அது நீதிக்கு உகந்ததாக இருக்காது. எனவே திருவாரூர் நீதிபதி விசாரிக்க தடை விதித்து அவற்றை உயர்நீதிமன்ற விசாரணைக்கு மாற்ற உத்திரவிட வேண்டும்’ என்று மனு தாக்கல் செய்தேன். அதன்படி உயர்நீதிமன்றம் தடை செய்து உத்ரவிட்டுள்ளது’’ என சுருக்கமாக முடித்துக்கொண்டார். நீதித்துறை வட்டாரத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் தன் பெயரை மறைத்தபடி நம்மிடம் இந்த விவகாரம் குறித்து கூற ஆரம்பித்தார்.

‘‘நான் நீதிபதி சந்திரசேகரனின் கீழ் பணியாற்றியிருக்கிறேன். ஒரு நீதிபதி எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமே அவர்தான். அதற்கு காரணம் தனக்கு மேலுள்ள இருவரை தனது ஊழலுக்கு பாதுகாப்பு கேடயமாக வைத்திருப்பதுதான்! தன்னை ‘ஐயா’ என்றுதான் அழைக்க வேண்டும் என்பார். எல்லோரையும் வா, போ என ஒருமையில்தான் பேசுவார். சக நீதிபதிகள் நாற்காலியில் அமர்ந்து பேசுவதை விரும்பமாட்டார்.

அவரிடம் எதிர்பார்ப்பு ஏராளம் இருக்கும். அதனை பூர்த்தி செய்யாதவர்களை தனது அதிகாரத்தால் ஆட்டிப் படைப்பார். ஒரு பெண் நீதிபதியை மூன்று இடத்திற்கு மாற்றி துன்புறுத்தினார். அவர் மேலிடத்தில் முறையிட்டு திரும்பவும் பழைய இடத்திற்கு வந்திருக்கிறார். சந்திரசேகரனால் பாதிக்கப்பட்டு இன்று நான் தொலைதூரத்தில் பணிபுரிகிறேன். என்றாலும் அவர் தொல்லையிலிருந்து விடுபட்டு இருப்பதில் நிம்மதி அடைகிறேன். நீதித்துறையில் பல கருப்பு ஆடுகள் உள்ளன. அவற்றை பத்திரிகைகள் துணிந்து அடையாளம் காட்ட வேண்டும்’’ என்று ஆதங்கத்துடன் பேசிமுடித்தார்.

மன்னார்குடியைச் சேர்ந்த செல்லத்துரை செட்டியார் என்பவர் நம்மிடம்,

‘‘மன்னார்குடி அஞ்சலகம் எதிரில் இரவு எட்டு மணியளவில் பலர் பார்க்க எனது மகன்களை கூலிப்படையினர் வெட்டினர். அதில் சிதம்பரம் என்ற மகன் சம்பவ இடத்திலேயே இறந்து போனான். இன்னொரு மகன் சிவாவை பல லட்சம் ரூபாய் செலவு செய்து நான்கு மாதங்கள் மருத்துவ சிகிச்சை செய்து பிழைக்க வைத்திருக்கிறேன்.

நான் மட்டுமல்ல... இந்த மாவட்டமே இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்து இருந்தது. எங்கள் வழக்கில் குற்றவாளிகள் 26 பேரில் மூவர் இறந்துபோக, எஞ்சியவர்களுக்கு தலைக்கு லட்ச ரூபாய் வீதம் பேரம் பேசி பணம் கைமாறி, தீர்ப்பு பாதகமாக வரும் என்ற தகவல் கிடைத்தது. நான் உயர்நீதிமன்றத்தில் தடை வாங்க முயற்சி செய்தேன். ஆனால் அந்த நீதிபதியின் கீழ் பணிபுரியும் ஒருவர், ‘எல்லோருக்கும் நிச்சயம் ஆயுள் தண்டனை கிடைக்கும். நீங்கள் தடையுத்தரவு வாங்க வேண்டாம்’ என்று தடுத்துவிட்டார். ஆனால் முடிவில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள். என்றாலும் நான் விடுவதாக இல்லை. மேல் கோர்ட்டில் அப்பீல் செய்திருக்கிறேன்’’ என்றார் சோகமாக!

பெயரை போட வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் வழக்கறிஞர்கள் சிலர் கூறிய தகவல்கள் திடுக்கிட வைத்தன.

‘‘நாங்கள் கடவுளுக்கு அடுத்து கைகூப்பி தொழுவது நீதிபதிகளைத்தான். ஆனால் அதற்கு முற்றிலும் தகுதியற்றவர் நீதிபதி சந்திரசேகரன். அவரை பார்க்கப் போனால் கிலோ கணக்கில் பழங்கள் மற்றும் வெள்ளியிலான பரிசுப் பொருளுடன்தான் போகவேண்டும்

. ஆய்வு நடத்த கோர்ட்டுக்கு வந்தால் குடும்பத்துடன் தான் வருவார். பிரியாணி சாப்பாடு போட்டு பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான வெள்ளிப் பொருள் கொடுத்துவிடவேண்டும். மரியாதை நிமித்தம் சால்வை போட்டால், சால்வைக்கு பதில் சபாரி சூட் துணி, அல்லது பாண்ட் சட்டையாக எடுத்துத் தாருங்கள் என்பார். கடந்த ஆண்டு மன்னார்குடி நீதிமன்ற ஆய்வுக்கு வந்த அவருக்கு இரண்டு வெள்ளி குத்துவிளக்குகள், சபாரி சூட், போன்றவற்றிற்கு 17 ஆயிரம் ரூபாய் செலவானது.

விறால் மீன் சீசன் நேரத்தில் பெரிய டிரம்மில் கோர்ட்டு ஊழியர்கள் மூலம் சென்னைக்கு கொண்டுபோய் தனக்கு உதவும் நீதித்துறைப் பிரமுகர்களுக்குக் கொடுக்கிறார். இவர் முகத்தை ஓரளவு வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருப்பவர் ஓ.எஸ்.மணியன்தான். அவரை பாராட்டியாக வேண்டும்’’ என்றனர் கோரஸாக.

இதற்கிடையில் மார்ச் 1&-ம் தேதி கோர்ட்டிலேயே, ‘எனக்கு எதிராக உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதியை கண்டித்து, மாவட்டம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தை நடத்துவீர்களா?’’ என்று நீதிபதி சந்திரசேகரனே கேட்டதாக ஒரு தகவல் பரவியது.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக நமக்கு வந்த புகார்களையெல்லாம் நீதிபதி சந்திரசேகரனைத் தொடர்பு கொண்டு, அனைத்தையும் முன்வைத்தோம். பொறுமையாகவும், தெளிவாகவும் நமக்கு பதில் சொன்னார்.

‘‘முதலில் ஓ.எஸ். மணியன் வழக்குப் பற்றி கூறிவிடுகிறேன். உயர்நீதிமன்ற உத்தரவு பற்றி பேப்பரில் வந்ததை நான் கவனிக்கவில்லை. அது முன்பே தெரிந்திருந்தால் அந்த ஜாமீன் கட்டையே தொட்டு இருக்க மாட்டேன். அவர் குறிப்பிட்டுள்ளது போல் என்மீது எந்தப் புகாரும் விசாரணையில் இல்லை. உயர்நீதிமன்ற உத்தரவு பெற்றிருக்கிறார்கள் அதற்கு தலைவணங்க வேண்டியது எனது கடமை.

அடுத்து செல்லத்துரை செட்டியார் மகன் கொலை வழக்குக்கு வருகிறேன். சாட்சிகள் இருந்தால்தான் தண்டனை கொடுக்க முடியும். நாங்கள் சட்டத்தை மீறி போகமுடியாது. போகவும் கூடாது. என்னை எல்லோருமே 'கன்விக்ஷன் ஜட்ஜ்' என்று தான் கூறுவார்கள். ரெக்கார்டுபடியும் சட்டத்தின்படியும், எனது பார்வைப்படியும் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கிறேன். அது அவருக்கு அநீதியாக தெரிந்தால் அப்பீலுக்கு போகவேண்டியதுதானே. அதை விட்டுவிட்டு குறுக்கு வழியில், தவறான வழியில் பத்திரிகைக்கு ஏன் போகவேண்டும்? மற்றபடி தடையுத்தரவு வாங்குவதை தடுத்தேன் பணம் வாங்கினேன் என்பதெல்லாம் அவரது கற்பனை.

நான் அநீதி இழைத்து அதன் மூலம் பாவத்தை சம்பாதித்து மனைவி மக்களுக்கு சேர்த்து வைக்க விரும்பவில்லை. எனது அப்பா செய்த புண்ணியத்தில்தான் நான் மெரிட்டில் படித்து, இந்த பதவியில் அமர்ந்திருக்கிறேன். நான் ஆன்மிகவாதி, கடவுள் பக்தி உள்ளவன். எல்லாம் அந்தக் கடவுளுக்குத் தெரியும்.

நான் திருநெல்வேலியில் பணியாற்றியபோது 150 பேருக்கும் மேலாக தண்டனை கொடுத்திருக்கிறேன். அதனாலேயே அங்குள்ள வக்கீல்கள் பிழைப்பு பாதிப்பதாக கூறி என்னை மாற்றினார்கள். அப்படிபட்ட என்மீது அபாண்டமாக புகார் கூறுகிறார்கள். மற்றபடி என்னைப் பற்றி கூறும் அத்தனை செய்திகளும் உண்மையல்ல.

நான் நாகப்பட்டினத்தில் பணியாற்றியபோது, ஒரு வழக்கறிஞரின் மனைவி இரவு 9 மணிக்கு, ‘என் கணவர் என்னைக் கொலை செய்யத் திட்டமிடுகிறார்’ என்று எனக்கு போன் செய்தார். நமக்கு எதற்கு பிரச்னை என்று நான் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அங்கே ஒரு குரூப் எனக்கு எதிராக என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயன்று வருகிறார்கள். நான் இன்னும் மூன்று மாதத்தில் ஓய்வு பெறப் போகிறேன். எனவே மாதத்திற்கு ஒரு வழக்குதான் விசாரிக்கிறேன். பிரச்னை இல்லாமல் ஓய்வு பெற நினைக்கிற நேரத்தில் தேவையில்லாமல் அவதூறு ஏற்படுத்துகிறார்கள். நான் ஆண்டவனிடம் ஒப்படைத்துவிடுவேன்’’ என்று பேசியவரிடம், ‘‘சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதிக்கு எதிராக போராட்டம் செய்ய தூண்டும் விதத்தில் பேசினீர்கள் என்கிறார்களே, உண்மையா?’’ எனக் கேட்டோம்.

‘‘பப்ளிக் கோர்ட்டில் நான் பேசியது உண்மைதான். ஆனால் அதை திரித்துச் சொல்கிறார்கள். சனி, ஞாயிறு விடுப்பில் இருந்தபோது சில வழக்கறிஞர்கள் என் மீது கொண்ட அன்பால் கோர்ட்டு புறக்கணிப்பு செய்யப்போவதாக சொன்னார்கள். நான் அதனை விரும்பவில்லை. நான் சென்னையில் இருப்பதால் நாளை நேரில் பேசிக்கொள்வோம் என்றேன். அதன் படி ரகசியமாகக் கூட பேசவில்லை. ‘உயர்நீதிமன்றத் தீர்ப்பு என் மனதை காயப்படுத்தியிருப்பது உண்மை. அதற்காக கோர்ட்டு புறக்கணிப்பு செய்வதால் என்ன பலன்? அதனை கடவுள் பார்த்துப்பார்’ என்றேன்.

அவர்களோ, ‘அய்யாவின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது. அதற்கு பத்து லட்சம் கொடுத்தாலும் ஈடாகாது. நாங்கள் போராட்டம் நடத்தி எதிர்ப்பை காட்டுகிறோம்’ என்றார்கள். ‘அதெல்லாம் கூடாது, நீங்கள் எனக்கு ஆறுதலாக இருப்பதே போதும். இன்று மனசு சரியில்லை’ என்று கூறி வீட்டிற்கு வந்துவிட்டேன். 27 வருடங்கள் நீதித் துறையில் பணிபுரிந்த நான், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பேசுவேனா? எல்லாம் வஞ்சகர்கள் செய்யும் வேலை’’ என்று நீண்ட விளக்கம் கொடுத்தார் நீதிபதி சந்திரசேகரன்.

சந்திரசேகரனின் கருத்துக்களை நாம் மதிக்கிறோம். ஆனால், சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டதாக நீதித்துறை இருக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் பதிவு செய்ய விரும்புகிறோம்!






இராகவன்


Comments:

No Comments

Post a Comment
User Name:
E-mail:
Comments:
நிர்மூலமான நித்யானந்தா
கமிஷன்... கடத்தில்... பலாத்காரம்..!
தி.மு.க. vs காங்கிரஸ்
அடுத்த என்கவுன்ட்டர் ‘அட்டாக்’ பாண்டி-
தேர் திருவிழாவில் ஹீரோவான பி.ஜே.பி., எம்.எல்.ஏ.!
‘ஒரு ரூபாய் நாணய’ வேட்டைக் கும்பல்!
தோடடக் கலைத் தொழிலாளர்கள்!
குறைவான நிறைகள்; நிறைவான குறைகள்
கலைஞர் கட்டளை:
தென்னவனுக்கு வலைவீசும் அ.தி.மு.க.!
அமைச்சர்கள்... அங்கே அப்படி.!
பயத்தில் பயணகள்; பரிதவிப்பில் தொழிலாளர்கள்!
நிதியில்லாமல் நீதியில்லை!