கலைஞர் கட்டளை:
குழந்தைகள் கொடிலயில் துப்பு துலக்கிய போலீஸ்!

‘‘அப்பாவி குழந்தைகளைக் கொன்றுவிட்டு சுதந்திரமாக அலைபவர்களை எப்போது கைது செய்யப்போகிறீர்கள்?’’
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற காவல்துறை உயரதிகாரிகள் கூட்டத்தில், கரூர் காவல்துறை அதிகாரிகளிடம் முதல்வர் கலைஞர் காட்டமாகக் கேட்ட கேள்வி இது. கலைஞரின் கட்டளைக்குப் பிறகு கொலை நடந்த மூன்றாவது வருடத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலைஞர் குறிப்பிட்ட அந்த சம்பவம்?
கரூர் அருகே உள்ள காந்திகிராமம் ஜி.ஆர்.வி. நகரில் எல்.ஐ.சி.வளர்ச்சி அதிகாரியான கார்த்திகேயன் வசித்தார். இவரது மனைவி ஜெயந்தி ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு ராம் பிரகாஷ் என்ற 12 வயது மகன், தீபிகா என்ற 7 வயது பெண் குழந்தை!
கடந்த 2007&ம் வருடம் மே 17&ம் தேதி... வீடு திரும்பிய பெற்றோருக்கு கடும் அதிர்ச்சி. வீட்டில் இருந்த ராம்பிரகாஷ்-, தீபிகா ஆகியோர் கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர். கதறிய பெற்றோர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க... அன்றைய எஸ்.பி.சுகுமார் கொலையாளிகளைக் கண்டறிய 5 தனிப்படைகள் அமைத்தார்.
அவ்வளவுதான்... மூன்று வருடங்கள் ஆகியும் எந்தத் துப்பும் இல்லை. இந்த நிலையில்தான் முதல்வரின் உத்தரவை அடுத்து கரூரின் புதிய எஸ்.பி. தினகரன் இந்த கொலை வழக்கை கண்டறிய 4 தனிப் படை அமைத்தார். இறுதியில் இலங்கை அகதி முகாமை சேர்ந்த குமார், திருட்டுப் பாண்டி, வழிப்பறி முரளி ஆகியோரை இந்த வழக்கில் கைது செய்திருக்கிறார்கள் போலீஸார்.
இந்த வழக்கு பற்றி தனிப்படை அதிகாரிகளிடம் கேட்டோம்.
‘‘கார்த்திகேயனும், ஜெயந்தியும் வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் குழந்தைகள் தனியாக இருக்கிறார்கள் என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்ட முரளி அந்த பெண் குழந்தையிடம் தண்ணீர் கேட்டுள்ளான். தண்ணீர் எடுத்து வர உள்ளே சென்ற சமயத்தில் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றவன் வெளியே இருந்த குமாரையும், பாண்டியையும் வரவழைத்துள்ளான். மூவருமே கஞ் சா போதையில் இருந்துள்ளனர்.
தேடிவந்த அளவுக்கு பணமோ, நகையோ கிடைக்காத ஆத்திரத்தோடு கஞ் சா போதையும் ஒன்று சேர... தீபிகாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இதைப் பார்த்துக் கத்திய ராம்பிரகாஷையும் கத்திக்கு இரையாக்கியுள்ளனர். வீட்டில் இருந்த 50 கிராம் வெள்ளி டாலரை எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டனர்’’ என்றனர்.
குற்றவாளிகள் பிடிபட்டது எப்படி என்பதை கரூர் எஸ்.பி. தினகரன் விளக்கினார். ‘‘மாவட்டத்தில் உள்ள 250 குற்றவாளிகளிடம் கைரேகை மற்றும் கால் ரேகையை பதிவு செய்தோம். மேலும் பழைய குற்றவாளிகளிடம் பிளட் சாம்பிள் எடுத்தோம். அதை வைத்து சோதனை செய்தபோது கொலை நடந்த இடத்தில் குழந்தைகள் ரத்தம் மட்டும் இன்றி மூன்றாவதாக ஒரு ரத்த வகையும் முக்கிய தடயமாக கிடைத்தது. அந்த ரத்த வகையையும், இவர்களின் ரத்த வகையையும் ஒப்பிட்டபோது ஒன்றாக இருந்தது. இதனை வைத்து மடக்கினோம். அவர்களும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்’’ என்றார்.
இதேநேரம்... ‘‘அ.தி.மு.க.வினர், இந்த குழந்தைகள் கொலை வழக்கில் கரூர் போலீசாரின் மெத்தனத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்ட தகவல் உளவுத் துறைக்குக் கிடைத்தது. அதை ஒட்டியே இந்த விறுவிறு நடவடிக்கை’’ என்று சொல்பவர்களும் இருக்கின்றனர்.
‘
என்.வெங்கடேஷ்
|