முதல் பக்கம் | ஆசிரியருக்கு மடல் | முந்தைய இதழ்கள் | தேவதை | திரிசக்தி | முகவரி

 Untitled Document

‘ஒரு ரூபாய் நாணய’ வேட்டைக் கும்பல்!
-இந்திய பொருளாதாரத்தை உருக்கும் பிளேடு கம்பெனிகள்




மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்திருந்து திருமங்கலம் செல்லும் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தோம். அப்போது கண்டக்டரிடம் ஐம்பது ரூபாய் நீட்டிய வயதான ஒரு பெண்மணி, டிக்கெட் எடுத்தது போக, ‘பாக்கி சில்லரைய வெறும் ஒரு ரூபாய் காசா இருந்தா கொடுப்பா. நீ நல்லா இருப்பே...’ என்று கண்டக்டரை வற்புறுத்திக் கொண்டே இருந்தார்.

‘வழக்கமாக கண்டக்டர்தானே சில்லரை கேட்டு நச்சரிப்பார். இது புதிதாக இருக்கிறதே’ என பொறி தட்டிய நாம், அந்த பாட்டியிடமே சந்தேகத்தைக் கேட்டோம்.

‘‘என் பேரு ராமலட்சுமி தம்பி... இப்பல்லாம் ஒரு ரூபாய் காசுக்கு ரொம்ப மவுசு ஆயிருச்சுப்பா. தேடித் தேடி அலைய வேண்டி இருக்கு. எல்லாத்தையும் பதுக்கி வச்சுட்டானுங்க. நானே இப்படி பஸ், டீ கடை, பூக்கடைகள்ல சில்லரை வாங்கி அதை அதிக விலைக்கு வித்துடுறேன். ஒரு ரூபா கொடுத்தா எனக்கு மூணு ரூபா கொடுக்குறாங்க’’ என்று அவர் வெள்ளந்தியாக பேசிவிட்டுப் போக நமக்கு ஒன்றுமே புரியவில்லை.

இந்தப் பேருந்து அனுபவத்தை ஒரு பெட்டிக் கடைக்காரரிடம் நாம் பகிர்ந்து கொண்டபோதுதான்,

‘‘ஆமாம் தம்பி. கண்டக்டர்-களாவது நம்மக்கிட்ட சில்லரைய வாங்கி நம்ம பக்கத்துல வர்றவர்கிட்ட கொடுத்துடு-வாங்க. ஆனால், முகம் தெரியாத சில்லரை வேட்டைக் கும்பல் யாருக்-காகவோ ஒரு ரூபா காசுகளை மட்டும் குறிவச்சி மதுரையில தீவிரமா இறங்கியிருக்கு’’ என கூடுதல் அதிர்ச்சி கொடுத்தார்.

விசாரணையை விரிவாக்கியபோது நமக்குக் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி ரகம்.

‘‘சமீப காலமாக வட மாநிலங்களில் இருந்து ஒரு ரூபாய் காசு புரோக்கர்கள் கூட்டம் தமிழ் நாட்டுக்குள் படையெடுத்திருக்கிறார்கள். இன்னொரு புரோக்கர்கள் கூட்டம் தமிழ்நாட்டுக்குள்ளேயே சில்லரை வேட்டையைத் தீவிரப்படுத்தி இருக்கிறது. யார் அதிகமாக ஒரு ரூபாய் காசுகளை கொள்-முதல் செய்வது என்று போட்டி போட்டு சேகரித்து வருகி-றார்கள். அந்த வகையில் வடமாநில கும்பலிடம் ஒரு ரூபாய் காயினைக் கொடுத்தால் அவர்கள் அதற்கு பதிலாக மூன்று ரூபாய் தருகிறார்கள்’’ என ஷாக் அடித்த மாதிரி தகவல் சொன்னார்கள் மேலும் சில சிறு கடைக்காரர்கள்.

‘ஒரு ரூபாய் காயினை மூன்று ரூபாய் கொடுத்து வாங்குவது முட்டாள்தனமில்லையா?’’ என்றோம் அவரிடமே.

‘‘அவர்கள் பக்கா புத்திசாலிகள் சார். சில்லரை வேட்டையாடி வரும் அந்த கும்பல் பிளேடு கம்பெனிகளுக்காகத்தான் களமிறங்கியிருக்கிறது. ஒரு ரூபாய் நாணயத்தை நம்மிடம் மூன்று ரூபாய்க்கு வாங்குபவர்கள் அதை மொத்தமாக கிலோ கணக்கில் சேர்த்து பிளேடு கம்பெனிகளிடம் பதினேழு ரூபாய் வரை லாபம் வைத்து விற்கிறார்கள். ஒரு ரூபாய் சில்வர் நாணயத்தை உருக்கினால் பத்து பிளேடுகள் தயாரிக்கலாமாம். ஒரு பிளேடு குறைந்தது இரண்டு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் அந்த புரோக்கர்களுக்கும் லாபம். பிளேடு கம்பெனிகளுக்கும் லாபம்.

பரவலாக வீடுகளில் பெண்கள், குழந்தைகள் உண்டியல்-களில் காசுகளை சேர்த்து வைத்திருப்-பார்கள். அவர்களைத் தேடியும் பெரிய கடைகள், சில்லரை வணிகர்கள், பஸ் கண்டக்டர்கள் என குறி வைத்தும் காசுகளை அள்ளுகிறது இந்த புரோக்கர்கள் கூட்டம்’’ என ஒற்றை ரூபாய் நாணய வேட்டையின் மறுபக்கத்தைக் கூறி அதிர வைத்தார்கள்.

ஒரு ரூபாய் நாணயத்தில் பிளேடு தயாரிக்க முடியுமா? என சில வேதியியல் துறை நண்பர்களிடம் விசாரித்தோம். ‘‘நாணயங்கள் தயாரிக்க அலுமினியம், காப்பர், சிறிதளவு டின் ஆகியவை கலந்த கலவைதான் பயன்படுத்தப்படுகிறது. இதில் காப்பரை மட்டும் பிரித்து எடுத்து விட்டால் மீதமுள்ள உலோகக் கலவையை பிளேடு தயாரிக்க அப்படியே பயன்படுத்தலாம். இதைப் புரிந்துகொண்டுதான் ஒரு ரூபாய் நாணயத்தை வேட்டையாடி வருகிறார்கள் போலிருக்கிறது’’ என்கிறார்கள் அவர்கள்.

இதற்கிடையில்... ‘‘ஒரு ரூபாய் காசுகளைக் கொண்டு பிளேடு மட்டும் தயாரிக்கப்படுவதில்லை. பளபள என இருக்கும் ஒரு ரூபாய் நாணயங்களை பிளேடு கம்பெனிகளிடம் விற்றுவிடும் புரோக்கர்கள்... மற்ற ஒரு ரூபாய் நாணயங்களை வடநாட்டில் செயல்படும் கள்ளத் துப்பாக்கித் தொழிற்சாலைகளுக்கு கொடுக்கிறார்கள். துப்பாக்கியில் போடப்படும் புல்லட்டுகளுக்கான குப்பிகள் செய்வதற்கும் ஒரு ரூபாய் நாணயம்தான் பயன்படுகிறதாம்’’ என்று ஷாக் தகவலைத் தந்தனர் மேலும் சிலர்.

சில்லரை வேட்டையை உறுதிப்-படுத்திக்-கொண்டு, நாணயங்களை உருக்கி உருமாற்றம் செய்பவர்களை தண்டிக்க சட்டம் என்ன சொல்கிறது என வழக்கறிஞர் ஜின்னாவிடம் கேட்டோம். ‘‘நாணயங்களை உருக்கி வேறு பொருளாக மாற்றுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 246, 247-ன் கீழ் நடவடிக்கை எடுத்தால் மூன்று ஆண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். அதோடு இல்லாமல் அந்த கம்பெனியும் இழுத்து மூடப்படும். தேச துரோகம் செய்த குற்றமாக கூட நாணயங்களை உருக்குவோர் மீது சட்டப் பிரிவு 124 ஏ-யின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். இந்திய நிதித் துறையும், உளவுத் துறையும் சரியான கண்காணிப்பில் இருந்தாலே இது போன்ற தேச துரோகிகள் உருவாகமாட்டார்கள்’’ என்கிறார் ஜின்னா.

‘‘விவசாயிகளுக்கு மத்திய அரசு மானிய விலையில் கொடுக்கும் யூரியா உரத்தில் இருந்து குளோரின் தயாரித்தும், வெடி பொருட்கள் தயாரித்தும் தனியார் கம்பெனிகள் கோடிகளில் புரண்டன. சமீபத்தில்தான் அவை சி.பி.ஐ. கையில் சிக்கின. அதே மாதிரி, பிளேடு தயாரிக்கும் நிறுவனங்களை சி.பி.ஐ சோதனை நடத்தினாலே டன் கணக்கில் இந்திய அரசு வெளியிட்ட நாணயங்கள் பதுக்கப்பட்டிருப்பது தெரியும். கள்ள நோட்டு அச்சடிப்பதைப் போன்றே இதுவும் இந்தியப் பொருளாதாரத்துக்கு அபாயத்தை விளைவிக்கும் விஷயம்தான்.’’ என்கிறார்கள் பொருளாதார விவரம் அறிந்தவர்கள்.

‘பிளேடுக்குள்ளே உற்றுப் பார்த்தேன் ஒற்றை நாணயம்’ என சினேகா மாதிரி சினிமா பாட்டுப் பாடிக்-கொண்டிருக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டிய-வர்கள் உடனடி-யாக செயல்பட--வேண்டும். இல்லாவிட்டால் ஒரு ரூபாய் நாணயத்தைப் போன்றே இந்திய பொருளாதாரத்தையும் உருக்கி விடுவார்கள். உஷார் உஷார்!






பாலா


Comments:

No Comments

Post a Comment
User Name:
E-mail:
Comments:
நிர்மூலமான நித்யானந்தா
கமிஷன்... கடத்தில்... பலாத்காரம்..!
தி.மு.க. vs காங்கிரஸ்
அடுத்த என்கவுன்ட்டர் ‘அட்டாக்’ பாண்டி-
தேர் திருவிழாவில் ஹீரோவான பி.ஜே.பி., எம்.எல்.ஏ.!
‘ஒரு ரூபாய் நாணய’ வேட்டைக் கும்பல்!
தோடடக் கலைத் தொழிலாளர்கள்!
குறைவான நிறைகள்; நிறைவான குறைகள்
கலைஞர் கட்டளை:
தென்னவனுக்கு வலைவீசும் அ.தி.மு.க.!
அமைச்சர்கள்... அங்கே அப்படி.!
பயத்தில் பயணகள்; பரிதவிப்பில் தொழிலாளர்கள்!
நிதியில்லாமல் நீதியில்லை!