அடுத்த என்கவுன்ட்டர் ‘அட்டாக்’ பாண்டி-
-அதிரும் மதுரை

‘‘வெள்ளத்துரை வைத்த குறி தப்பியது’’ என்ற தலைப்பில் மதுரை என்கவுன்ட்டர் பற்றி கடந்த 25.02.2010 ‘தமிழக அரசியல்’ இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதில், ‘மதுரையில் உள்ள முக்கியமான சிலருக்கு என்கவுன்ட்டர் திட்டம் தயாராகியது. ஆனால் எப்படியோ இதைத் தெரிந்துகொண்ட அவர்கள் எஸ்கேப் ஆகிவிட்டார்கள்’ என குறிப்பிட்டிருந்தோம்.
போலீஸின் குறியில் இருந்து அப்போது தப்பியவர்களில் ‘அட்டாக்’ பாண்டியும் ஒருவர் என்ற தகவல்தான் இப்போது மதுரையை உலுக்கும் பரபரப்பு.
அருப்புக்-கோட்டையில் துப்பாக்கிக் கடத்தல் தொடர்-பாக விஜய் பாண்டி என்ப-வரைக் கைது செய்த போலீஸாருக்கு, விசாரித்தபோதுதான் ‘அட்டாக்’ பாண்டியின் அக்கா மகன்தான் விஜய் பாண்டி என்ற தகவல் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே வெள்ளத்துரை வைத்த குறியில் தப்பிய ‘அட்டாக்’ பாண்டியை தற்போது விடக் கூடாது என போலீஸார் தீவிரமாக இருப்பதாக முணுமுணுக்கிறார்கள் போலீஸ் வட்டாரத்திலேயே.
மத்திய அமைச்சர் ஆவதற்கு முன்பு வரை மு.க.அழகிரியின் அன்புக்கும் ஆசிக்கும் உரியவராக மதுரையில் தில்லாக வலம் வந்த ‘அட்டாக்’ பாண்டியின் நிலைமை இப்படி ஆன பின்னணி என்ன?
அதை அறிவதற்கு முன் அட்டாக் பற்றி சிறு ஃப்ளாஷ்பேக் கூறுகிறார்கள் மதுரையிலுள்ள விவரமான உடன்பிறப்புகள்.
‘‘ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கள்ளக்காரி கிராமத்தில் பிறந்தவர் பாண்டி. 1982&ல் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் குடி தண்ணீர் பிரச்னையால் துப்பாக்கிச்சூடு நடந்த வாகைகுளத்தின் பக்கத்து கிராமம்தான் இது. இப்படி வறட்சியான கிராமத்தில் இருந்து பாண்டியின் அப்பா பொன்னுச்சாமி, பிழைப்பு தேடி மதுரைக்கு இடம் பெயர்ந்தார்.
அங்கே தன்னுடைய உறவினரான எஸ்ஸார் கோபி குடும்பத்தாரிடம் அடைக்கலமானார். மாநகராட்சி கட்டண கழிப்பறைகள் கண்காணிப்பு, பிறகு கந்து வட்டி என தொழில் செய்ய... அந்த நேரத்தில் கீரைத்துறை பகுதியில் பாண்டி, அவரது அண்ணன் ஆகியோர் தனக்கென ஒரு கூட்டத்தை வளர்த்துக்கொண்டனர். இந்த காலத்தில்தான் பாண்டிக்கு ‘அட்டாக்’ என்ற பட்டமும் வந்து ஒட்டிக்கொண்டது.
நாளடைவில் சொந்தம் விட்டுப் போகக் கூடாது என எஸ்ஸார் கோபியின் சின்னம்மா மகளையே திருமணம் செய்துகொண்டார் ‘அட்டாக்’. தன்னுடன் ரொம்ப நெருங்கிவிட்டதால்... ‘அட்டாக்’ பாண்டியை அழகிரி வீட்டிற்கு அழைத்துப் போய் வேலைக்கு சேர்த்து விட்டார் எஸ்ஸார் கோபி.
அழகிரியின் குடும்பத்தார் செல்லும் இடங்களுக்கு முழு பாதுகாப்பு ‘அட்டாக்’ பாண்டி தான். சில காலங்கள் உருண்ட பின்னர் வேலைக்கு சேர்த்து விட்ட எஸ்ஸார் கோபிக்கும் ‘அட்டாக்’ பாண்டிக்கும் இடையே உரசல் ஏற்பட்டுவிட்டது. ஆனால் அப்போது கீரைத்துறை ஏரியா முழுதும் அட்டாக் குரூப்பின் கன்ட்ரோலில் இருந்தது.
தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் மதுரையில் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் அழகிரி கைது செய்யப்பட்டபோது, அவருடைய குடும்பத்திற்கு முழு பாதுகாப்பாக இருந்தது ‘அட்டாக்’. இதனால் அழகிரிக்கு ரொம்பவே பிடித்துப் போனது ‘அட்டாக்’ பாண்டியை. மதுரையில் சில ஏரியாக்களில் மட்டுமே பெயர் தெரிந்தவராக இருந்த ‘அட்டாக்’ பாண்டியை தமிழகம் முழுக்க அறிமுகப்படுத்தியது மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட சம்பவம்தான். இவ்வழக்கில் சி.பி.ஐ. முதல் குற்றவாளியாக ‘அட்டாக்’ பாண்டி பெயரை சேர்த்தது’’ என்றவர்கள் கொஞ்சம் மூச்சுவிட்டபடி தொடர்ந்தனர்.
‘‘தி.மு.க ஆட்சி வந்த பிறகு அழகிரியின் உண்மையான விசுவாசிகளுக்கு தகுந்த பலன் கிடைத்தது. ஆனால் தனக்கு மட்டும் எந்த பலனும் இல்லை என்று அவ்வப்போது அழகிரியிடம் ‘அட்டாக்’ முறையிட்டது உண்டு. தனக்கு பதவி கொடுப்பதை தடுப்பது தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் என்கிற சுரேஷ்பாபுதான் என கருதினார் ‘அட்டாக்’. இதனால், பொட்டு சுரேஷுடன் ‘அட்டாக்’ மோத... இந்த மோதலை அழகிரி தான் பேசி தீர்த்து வைத்தார்.
அதேநேரம், பொட்டு சுரேஷ் வீட்டின் கேட் முன்பு நாட்டு வெடிகுண்டை அதிகாலையில் வீசி விட்டு சென்றது ஒரு கும்பல். ஆனால், பிறகுதான் தமிழ்நாடு வேளாண் விற்பனை குழு தலைவர் பதவி, மேலூர் பக்கம் கிரானைட் குவாரி என அட்டாக்கிற்கு கிடைத்தது. இது எல்லாம் விசுவாசத்திற்காக ‘அட்டாக்’ பாண்டிக்கு அழகிரி கொடுத்தது.
ஆனால், கீரைத்-துறையில் ஜெயம் ரியல் பைனான்ஸ் நிதி நிறுவனத்துக்கு இடம் கொடுத்ததோடு... அதன் இயக்குனர் அசோக்குமாரின் மைத்துனர் ராஜ்குமாரை கடத்திய வழக்கில் ‘அட்டாக்’ பெயர் அடிபட, தி.மு.க. அடிப்படை உறுப்பினர் முதல் வேளாண் விற்பனைக் குழுத் தலைவர் பதவி வரை அத்தனை பதவியிலிருந்தும் ‘அட்டாக்’கை நீக்கியது தி.மு.க. தலைமை. இங்கேதான் ‘அட்டாக்’கின் போதாத காலம் ஆரம்பம்’’ என கூறி முடித்தார்கள்.
அழகிரியின் நெருக்கமான வட்டாரத்தில் துருவியபோது இதன் தொடச்சியான தகவல்கள் கிடைத்தன.

‘‘அண்ணன் இருக்கிறார் மீண்டும் பொறுப்பு கிடைக்கும் என்று நம்பினார் ‘அட்டாக்’. ஆனால், இதுதான் சமயம் என அண்ணனை நெருங்கமுடியாதபடி அவருக்கு முட்டுக்கட்டைகளைப் போட்டனர் சிலர். இதனால் விரக்தியடைந்த அட்டாக், ‘என்னை வாழ விடாதவர்களை நானும் வாழ விட மாட்டேன்’ என ஒரு கட்டத்தில் புலம்ப... இதை அப்படியே அண்ணனுக்கு பாஸ் செய்தது அந்த ‘முட்டுக்கட்டை குரூப்’. அதன் பிறகுதான் மதுரையில் உள்ள ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு சென்னை போலீஸ் தலைமைக்கு அனுப்பப்-பட்டதாம்.
இதையடுத்துதான் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை மதுரைக்கு மாற்றப்பட்ட சம்பவமும் நடந்தது. இந்த நிலையில்... வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படை அட்டாக்கை விட்டு விட்டு துரத்தியது. இரண்டு வாரங்களுக்கு முன்னால் கீரைத்துறை இன்ஸ்பெக்டர் நெல்சன், ‘அட்டாக்’ அண்ணன் இருளாண்டியை நடு ரோட்டில் வைத்து துவைத்து எடுத்து விட்டார். இதுவும் ‘அட்டாக்’குக்கு ஒரு சமிக்ஞைதான். இதெல்லாம் தெரிந்து ‘அட்டாக்’கின் மனைவி மாநகரின் முக்கிய அதிகார மையத்திடம் ஓடிச் சென்று இதுவரை சம்பாதித்த சொத்துக்களின் ஆவணங்களை எல்லாம் கொடுத்து தாலிப்பிச்சை கேட்டு அழுததாகவும் தகவல்.
போலீஸ் வேட்டைக்கு வாகாக அருப்புக்கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிக் கடத்தல் வழக்கு தொடர்பாக, ‘அட்டாக்’கின் அக்கா மகன் விஜய்பாண்டி கோர்ட்டில் சரணைடந்தார். இதில் ‘அட்டாக்’ மீதும் முடிச்சுகள் விழுந்து இறுகப் போகின்றன’’ என நிறுத்தினர்.
ஆனால்... ‘அட்டாக்’ பாண்டியை அறிந்தவர்களிடம் பேசும்போது இதற்கு வேறொரு முடிச்சு போடுகிறார்கள்.
‘‘மதுரை அண்ணனைச் சுற்றி இரண்டு அணிகள் நீயா? நானா? என சாதி ரீதியாக இயங்கி கொண்டிருக்கிறது. அதன் விளைவுதான் இப்படிப்பட்ட சம்பவம் எல்லாம். பாண்டிக்கும் துப்பாக்கி கடத்தலுக்கும் சம்பந்தம் இல்லை. இப்படிச் சொல்லி ‘அட்டாக்’ பாண்டியை ஒரு வேளை என்கவுன்ட்டர் செய்துவிட்டால்... தி.மு.க.காரராக இருந்தாலும் தயவுதாட்சண்யம் காட்ட-மாட்டோம் என தேர்தல் நேரத்தில் பேச வசதியாக இருக்கும். மேலும், ‘தினகரன்’ அலுவலக எரிப்பு வழக்கில் குற்ற-வாளியான பாண்டியை தண்டிப்பதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களையும் முழுமையாக திருப்திப்-படுத்திவிடலாம். இதுதான் சிலரது திட்டம்.’’ என்கிறார்கள்.
கூட இருந்தவர்கள் சிக்கலில் மாட்டிக்-கொண்டால் அவர்களை காப்பாற்றுவதில் மு.க. அழகிரி வல்லவர் என்பது தென்மாவட்ட உடன்பிறப்புகளின் பலமான நம்பிக்கை. ஆனால் ‘அட்டாக்’ பாண்டி விஷயத்தில் இது பொய்த்துவிடுமோ என்ற சந்தேகம் அவர்களுக்குள் ஊடுருவத் தொடங்கியிருப்பதென்னவோ உண்மை!
‘‘தவறு செய்தால் என்கவுன்ட்டர்தான்!’’
போலீஸின் தேடுதல் தீவிரமாக கடந்த 2- ம் தேதி திண்டுக்கல் கோர்ட்டில் சரண்டராகிவிட்டார் விஜய் பாண்டி.
‘‘தினகரன் ஊழியர்கள் கொலை வழக்கில் ஒரு குற்றவாளி. கட்டபஞ்சாயத்து மன்னன், தடைச் செய்யப்பட்ட லாட்டரி, மணல் கடத்தல், ஆள் கடத்தல் போன்றவை விஜய் பாண்டியின் க்ரைம் கணக்கில் உண்டு. அரசியல் செல்வாக்குதான் துப்பாக்கி வியாபாரம் செய்ய இவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது. அழகிரியுடன் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில், அவரை குஷிப்படுத்த அவரது மகன் தயாநிதி பெயரில் ஆரம்பிக்கப்பட்டதுதான் தயா மியூசிக்கல்ஸ். வீடியோ கடை என்ற பெயரில் 12 ஆயிரம் ரூபாய் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரையிலான துப்பாக்கிகளை விற்பனை செய்துள்ளார். லோக்கல் ரவுடி முதல், வி.ஐ.பி.க்களும் இவரது துப்பாக்கிகளுக்கு கஸ்டமர்’’ என அதிர்வேட்டுத் தகவல்கள் தருகிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.
இவருக்கு பார்சல் அனுப்பிய ஏழுகிணறு சுரேஷ் யார்?
‘‘பிளாட்பார்ம் துணி வியாபாரி. லாட்டரி டிக்கெட், போதை வஸ்துகள் என்று பலவற்றை பட்டுச் சேலைகளுக்கு நடுவில் வைத்து அனுப்புவது இவனது வழக்கம். தனக்கு மாஃபியா கும்பல்களிடமிருந்து வரும் பார்சல்களை தென்னிந்தியாவின் பல பகுதிகளுக்கு, ஆம்னி பஸ்கள் மூலம் பார்சல்களை அனுப்பி வந்தவன்’’ என்றனர் போலீஸார்.
இச்சம்பவம் குறித்து தென் மண்டல ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். ‘‘இந்த வழக்கில் மூன்று பேரை கைது செய்துள்ளோம். ‘அட்டாக்’ பாண்டி உள்ளிட்ட சிலரை தீவிரமாக தேடி வருகிறோம்’’ என்றவரை இடைமறித்து, ‘அட்டாக் பாண்டியை என்கவுன்ட்டர் செய்யப்போவதாக பொது மக்கள் மத்தியில் பேசப்படுகிறதே’ என்று கேட்டோம்.
‘‘தவறு செய்தது யாராக இருந்தாலும் என்கவுன்ட்டர் செய்ய வேண்டியதுதான்’’ என்றார் அதிரடியாக!
‘
க்ரைம் கண்ணன்
|