எண்ணத்தைச் சொல்கிறேன்
ஆண்டியின் சொல் அம்பலம் ஏறுமா?

ஒருகாலத்துல ஒரு ராஜா இருந்தாரு என்று கதை சொல்ல ஆரம்பிப்பது வீட்டிலிருக்கும் பெரிசுகளின் வழக்கம். இனி ஒருகாலத்துல விவசாயின்னு ஒருத்தர் இருந்தாரு, நெசவாளருன்னு ஒருத்தர் இருந்தாரு என்றெல்லாம் கதை சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள் போலிருக்கிறது. அந்த அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது. ஈழத் தமிழர்களைப்போல் நசுங்கி நாசமாகிக் கொண்டிருக்-கின்றன வேளாண்மையும், நெசவும். ஏனென்று கேட்க நாதியில்லாமல் போய்விட்டது.
காஞ்சிபுரத்துக்குப் போனால் காலாட்டிப் பிழைத்துக் கொள்ளலாம் என்று சொல்வதுண்டு. இப்போதல்ல, ஒரு 20, 25 ஆண்டுகளுக்கு முன். சென்னையிலிருந்து செங்கல்பட்டு போய் பாலூர் வழியாக காஞ்சிபுரம் போனால், வழியெங்கும் தறி ஓடிக்கொண்டிருக்கும். காஞ்சிபுரம் மட்டுமில்லை. அரக்கோணம், வாலாஜா, திருத்தணி என்று சென்னையைச் சுற்றி ஒரு ரவுண்ட் அடித்தால் தெருவுக்குத் தெரு தறியின் சத்தம் கேட்கும். வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில், சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும். நேர்த்தியான துணிகளை மட்டு-மில்லாமல் தங்களது வாழ்க்கையையும் தாங்களே நெய்து பழக்கப்பட்டவர்கள் அந்த மக்கள். சுயமரியாதை மிக்க சம்சாரிகள். அளவான வாழ்க்கை, அழகான வாழ்க்கை.
திருத்தணியிலிருந்து ஆர்.கே.பேட் எனப்படும் ராமகிருஷ்ண பேட்டை வழியாக சோளிங்கர் வரை பேருந்தில் சென்றால், ஊருக்கு ஊர் தறிகள் தென்படும். அங்கே நெய்யப்பட்ட துணிகள், குறிப்பாக லுங்கிகள் மிகவும் தரமானவை என்று கூறப்பட்டது. பிராண்ட் பெயர் பார்த்து சென்னையில் நீங்கள் வாங்கியதெல்லாம், அங்கேயிருந்து கொள்முதல் செய்யப்பட்டு கம்பெனியின் லேபிள் குத்தப்பட்ட லுங்கியைத்தான்.
இப்போது நெசவு எனப்படும் இந்தக் கௌரவமான சுயதொழில் எங்கே போய்விட்டது? சென்ற வாரம் சோளிங்கர் சென்றிருந்தபோது, எங்கே எங்கே என்று வழியெல்லாம் விழிகளால் விசாரித்தபடியே போகிறேன்... தறிகளைக் காணவில்லை. சென்ற வேலை முடியவில்லை என்பதைக் காட்டிலும், தறிகளைக் காணாத சோகம்தான் மனத்தைப் பாடாய்ப் படுத்தியது.
நூல் விலையேற்றத்தால் உற்பத்திச் செலவு அதிகரித்துக் கொண்டே போனதை அடுத்து, தொழிலைத் தொடர முடியாத நிலைக்கு நெசவாளர்கள் தள்ளப்பட்டனர் என்று ஒரு காரணம் சொல்லப்படுகிறது. உலகமயத்தின் பெயரால் வெளிநாடுகளிலிருந்து, அதிலும் குறிப்பாக இந்தியாவின் நண்பன் இலங்கை மற்றும் வங்கதேசத்திலிருந்து துணிகள் கொண்டுவந்து குவிக்கப்பட்டது இன்னொரு காரணம். அரசாங்கத்தின் ஆதரவு குறைந்துகொண்டே போவது, தொழிலாளிக்குக் கட்டுப்படியாகாத கூலி என்று இன்னும் சில காரணங்கள்.
லுங்கி உற்பத்தியில் முன்னணியில் இருந்த தென் ஆற்காடு, வேலூர், சோளிங்கர், விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம் பகுதிகளில் தறிகளின் இயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக முடக்கப்பட்டது, 1991க்குப் பிறகுதான். காங்கிரஸ் அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையால் விசைத் தறிகள் ஆசீர்வதிக்கப்பட்ட காலகட்டம் அது. கைத்தறிக்கு ஆன உற்பத்திச் செலவில் மூன்றில் ஒரு பங்குதான் ஆயிற்று விசைத் தறிக்கு. சந்தையில் போட்டிபோட முடியவில்லை, கைத்தறி நெசவாளர்களால்.
கைத்தறி உற்பத்தி மந்தமாக இருக்கும் மாதங்-களில் விவசாயத்தையும் பகுதிநேரத் தொழிலாகப் பாவித்த நெசவாளர்கள், உலகமயத்தால் விவசாயமும் நொடிந்துபோய்விட்ட நிலையில், கட்டடத் தொழிலாளர்களாகவும் அவதாரமெடுக்க-வேண்டிய அவசியம் ஏற்பட்டது. உழைத்துச் சாப்பிட்ட சமூகம் அது. இதைப் பற்றியெல்லாம் அரசியல்வாதிகள் கவலைப்படவில்லை. ஏனென்றால், அவர்-களுடையது உழைக்காமல் சாப்பிடும் தொழில்.
இந்த நிலைக்கு முடிவுகட்ட கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் என்ன செய்தன? சுமார் 55 ஆண்டுகளுக்கு முன், இதேபோன்ற வீழ்ச்சியை நெசவுத்தொழில் சந்திக்க நேர்ந்ததுதான் கூட்டுறவு சங்கங்கள் தோன்றக் காரணமாய் அமைந்தது. அப்போது, பாரம்பரிய கைத்தறி நெசவுக்குப் பெயர்போன ஸ்ரீவில்லிபுத்தூர் நெசவாளர்கள், சென்னை நோக்கி ஒரு பட்டினிப் பேரணி மேற்கொண்டனர். அதையடுத்தே கூட்டுறவுச் சிந்தனை உருவானது.
சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, 2002-ல் அதே போன்ற நிலையை நெசவாளர்கள் சந்திக்க நேர்ந்தது. கஜானா காலியாகிவிட்டதாகக் கூறி மலிவுவிலைத் துணிகளை கொள்முதல் செய்வதை அரசு நிறுத்திவிட, நெசவாளர்கள் நொந்துபோனார்கள்.
ஐந்து தசாப்தத்துக்கு முன் பட்டினிப் பேரணி நடத்திய ஸ்ரீவில்லிபுத்தூர் நெசவாளர்கள், தங்கள் குடும்பத்தினர் ஒருவேளை கஞ்சியாவது குடிக்க-வேண்டும் என்பதற்காக, சமூக உணவுக்கூடம் அமைத்து, அக்கம்பக்கம் ஊர் மக்களிடமிருந்து தானியங்களைச் சேகரித்துவந்து சமைத்தனர். எதிர்க்-கட்சிகள் உதவ முன்வந்தன. அவர்கள் ஏற்கமறுத்தனர். இலவச அரிசி கொடுப்பதாக அறிவித்தது தமிழக அரசு. அதையும் ஏற்கவில்லை. எங்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்கிற வழியைப் பாருங்கள் என்று முகத்திலடித்-தாற்போல் சொல்லிவிட்டார்கள்.
அப்போது அ.தி.மு.க. ஆட்சி. உடனே, அரசியல் நெசவில் இறங்கிய தி.மு.க., வறுமையில் வாடும் நெசவாளர்களுக்காக தமிழகமெங்கும் கஞ்சித் தொட்டிகளைத் திறந்தது. அ.தி.மு.க.வால் சும்மாயிருக்க முடியுமா..? போட்டாபோட்டியாக பிரியாணி, முட்டை என்று களத்தில் இறங்கியது. கஞ்சி குடிக்காவிட்டால் அவன் அடிப்பான், பிரியாணி சாப்பிடாவிட்டால் இவன் அடிப்பான் என்று பயந்து பலர் தங்கள் வீட்டைவிட்டே வெளியே வரவில்லை.
இரண்டு பெரிய கட்சிகளுமே, நெசவாளரின் இந்த நிலைக்கு என்ன காரணம் என்பது குறித்துக் கவலைப்-படவேயில்லை. தேசியக் கட்சியான காங்கிரஸுக்கோ, நெசவுத் தொழில் இருந்தாலென்ன இறந்தாலென்ன என்கிற அலட்சியம். கதர்த் துணிக்கே கல்லறை கட்டிவிட்ட மகானுபாவர்கள் அவர்கள்!
இத்தனை பேரின் அலட்சியத்தால், நெசவாளரின் நிலை அதலபாதாளத்துக்குப் போய்விட்டதைத்தான் சோளிங்கர் பயணம் எனக்கு உணர்த்தியது. அந்த அதியற்புதமான சுயதொழிலை அழிவின் விளிம்-பிலிருந்து காப்பாற்றவே முடியாதா என்ற பயம் சட்டையைப் பிடித்து உலுக்கியது.
விவசாயத்துக்கு அடுத்த நிலையில் இருந்த கௌரவமான சுயதொழில் அது. நீலகிரி மாவட்டத்-தைத் தவிர, தமிழகத்-தின் மற்ற எல்லா மாவட்டங்-களிலுமே கைத்தறிகள் இருந்தன, இருக்கின்றன. 6 லட்சம் கைத்தறி யூனிட்டுகள், 1400 கூட்டுறவு சங்கங்கள் என்று தமிழ்நாடு வலுவாக இருந்த சமயத்தில், நாட்டின் கைத்தறி உற்பத்தியில் நமது பங்கு 30 சதவிகிதமாக இருந்தது. நாட்டின் ஏற்றுமதியில் 50 சதவிகிதம் நம்முடையதாக இருந்தது. இந்தப் பெருமை-யெல்லாம் இப்போது இல்லை. உறையூர் சேலை, ஆரணிப் பட்டு, சோளிங்கர் லுங்கி என்ற பெயரையெல்லாம் மறந்து வருகிறோம்.
டஸ்டர் துணியிலிருந்து பட்டுச் சேலை வரை நெசவாளரை வாழ-வைத்தது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜ-பாளையம், ஆண்டிப்பட்டி, அம்மையார்குப்பம், காஞ்சிபுரம், ஆரணி, கீழ்க்கொடுங்காளூர், திரி-புவனம், சென்னிமலை, உறையூர் என்று கைத்தறிக்குப் பெயர்பெற்ற ஊர்களை தமிழக வரைபடமெங்கும் குறித்துவைக்கமுடிந்தது. தடுக்கிவிழுந்தால் தறி இருந்தது. மீண்டும் அதே நிலையை எட்டிப்-பிடிக்கவேண்டும். மலிவு விலைத் துணி நெய்து-கொடுங்கள், அரசே கொள்முதல் செய்துகொள்ளும் என்பதெல்லாம் கட்டடத்துக்கு முட்டுக் கொடுக்கும் வேலை.
தொழிலையும் இழக்காமல் சுயமரியாதையையும் இழக்காமல் அழிவிலிருந்து நெசவாளர்கள் மீண்டு வரவேண்டும். கைத்தறித் துணிகளுக்கான தேவையைப் பெருக்கு-வதன் மூலம் மட்டுமே இதைச் சாதிக்க-முடியும். அதை எப்படிப் பெருக்கமுடியும்? கைத்தறியைத்தான் பயன்-படுத்த வேண்டும் என்று சட்டமா போட-முடியும்? இப்படியெல்லாம் கேட்காதீர்கள். அரசால் அப்படியொரு சட்டம் போடமுடியும். எப்படி?
தமிழ்நாடு முழுவதும் உள்ள தொடக்கப்-பள்ளிகளில் 1529 பள்ளிகள், அரசுப் பள்ளிகள். பஞ்சாயத்து யூனியன் சார்பில் நடத்தப் படுபவை, 21,906 பள்ளிகள். நகராட்சி மற்றும் மாநகராட்சிகளால் நடத்தப்படுபவை 896 பள்ளிகள். இவற்றில் படிப்பவர்கள் 39 லட்சம் மாணவர்கள்.
நடுநிலைப் பள்ளிகளில், அரசுப் பள்ளிகள் 390. பஞ்சாயத்து யூனியன் பள்ளிகள் 5488. நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பள்ளிகள் 453. இவற்றில் படிப்ப-வர்கள் 23.5 லட்சம் மாணவர்கள்.
உயர்நிலைப் பள்ளிகளில், அரசுப் பள்ளிகள் 2016. அரசு உதவிபெறும் பள்ளிகள் 613. நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பள்ளிகள் 110. இவற்றில் படிக்கும் மாணவர்கள் 19 லட்சம்.
மேல்நிலைப் பள்ளிகளில், அரசுப் பள்ளிகள் 1696. அரசு உதவி பெறும் பள்ளிகள் 1062. நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பள்ளிகள் 93. இவற்றில் படிப்பவர்கள் சுமார் 35 லட்சம் மாணவர்கள்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், மக்களின் வரிப்பணத்தில் நடக்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை, சுமார் 1 கோடியே 16 லட்சத்து ஐம்பதாயிரம். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை ஒன்றே கால் கோடியாக உயர்ந்திருப்-பதற்கு வாய்ப்பிருக்கிறது. இந்த ஒன்றேகால் கோடி மாணவ மாணவிகளுக்கும் சீருடை இருக்கிறது. அரசுக்கும் நெசவாளர்-களுக்கும் கிடைத்திருக்கிற மிக அரிய வாய்ப்பு இது. இந்த ஒன்றேகால் கோடி மாணவ மாணவிகளும் அணிகிற சீருடை கைத்தறியில்தான் இருக்க-வேண்டும் என்று சட்டம் போட அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. எதற்கெல்லாமோ சட்டத்துக்கு மேல் சட்டம் போடும் அரசால், இப்படியொரு சட்டம் போட முடியாது என்று சொல்ல முடியாது.
பெற்றோர் தரப்பிலிருந்து, இதற்கு எந்த எதிர்ப்பும் வராது. இப்போதுதானே புதிய சீருடை தைத்தோம் என்ற ஆதங்கம் வேண்டுமானால் எழலாம். அவர்கள் குரலுக்கு மதிப்பளிக்கிற விதத்தில், இந்தச் சட்டம் ஆறு மாதம் கழித்துத் தான் அமலுக்கு வரும், அதுவரை இப்போது தைத்த சீருடைகளை அணியத் தடையில்லை என்று அறிவிக்கலாம்.
இப்படியொரு சட்டத்தைக் கொண்டுவருவதன் மூலம், நெசவாளர்களை மீண்டும் வாழவைக்கலாம், பாரம்பரிய கைத்தறித் தொழிலைக் காப்பாற்றலாம், ஏற்றத் தாழ்வை அகற்றவே சீருடை என்ற வாதத்தை முழுமைப்படுத்தலாம், கஞ்சித் தொட்டி அரசியலி-லிருந்து நெசவாளர்களைக் காப்பாற்றலாம். ஒரே ஒரு சட்டத்தின் மூலம் இவ்வளவையும் சாதிக்கமுடியும். அடுத்தமுறை சோளிங்கர் போகிறபோது, செல்லும் வழியெல்லாம் தறிகளைத் தரிசிக்கவும் முடியும். ஆண்டியின் சொல் அம்பலம் ஏறுமா? கலைஞர் அரசு இதைச் செய்யுமா?
*
‘
புகழேந்தி தங்கராஜ்