கன்னியாகுமரி
கண்ணீர்விடும் சுற்றுலாப் பயணிகள்!

சிவனை திருமணம் செய்ய வேண்டி, அன்னை பராசக்தி தவமிருந்து கன்னியாகவே வீற்றிருக்கிறாள் குமரியில். குமரி அம்மன் கன்னி பகவதியாக வீற்றிருப்பதினால், இம்மாவட்டம் கன்னியாகுமரி என பெயர் பெற்றது. முக்கடலும் சங்கமிக்கும் புனித கடலில் நீராடி கதிரவனை வழிபடுவது புண்ணியமாகும்.
தென்னாட்டவர்கள் காசிக்குப் போய் கங்கையில் குளிப்பது வழக்கம். வடநாட்டவர்கள் குமரிக்கு வந்து குமரிக் கடலில் குளிப்பது வழக்கம். இத்தனை சிறப்பு மிக்க குமரி, சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. ஆனால், எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் கலாசார சீரழிவை நோக்கிச் செல்கிறது.
அதே நேரத்தில், பெருமைக்குரிய கன்னியாகுமரி, நிஜமாகவே புண்ணிய ஸ்தலமாகப் பேணப்பட்டு வருகிறதா..?
குமரி மாவட்ட முக்கிய சுற்றுலாத் தலமான பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிபாலம், திற்பரப்பு அருவி, காளிகேசம், நாகராஜா கோயில், சுசீந்திரம், திருவட்டார், சிதறால் கோயில்கள், பிரசித்திப் பெற்ற 12 சிவாலயங்-கள், உதயகிரி கோட்டை, முக்கடலும் சங்கமிக்கும் குமரி முனை, வட்டகோட்டை, சொத்தவிளை எழில்-கொஞ்சும் கடற்-கரைகள், முக்கடலும் சங்கமிக்கும் அழகான கடற்கரை, கம்பீரமாகக் காட்சியளிக்கும் விவேகானந்தர் பாறை, வானுயர்ந்த 133 அடி உயர திருவள்ளுவர் சிலை போன்றவற்றை காண்பதற்கு குமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நகர எல்லையில் கிடைக்கும் வரவேற்பே அவர்களை அலற வைக்கிறது.
சுற்றுலாவுக்கு வரும் வாடகை வாகனங்களுக்கு மட்டுமே நுழைவுக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது விதி. ஆனால், சுற்றுலா வரும் பயணிகளின் சொந்த வண்டிகளுக்கும் இங்கு நுழைவுக் கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதும், செக்போஸ்ட் இருப்பதைக் கவனிக்காமல் செல்லும் வாகனங்கள் மீது முறைகேடாக ரவுடிகள் துணையோடு அநாகரிகமான முறையில் வரி வசூலிப்பதும் அன்றாட நிகழ்ச்சி.
அடுத்த அதிர்ச்சி உணவு விடுதிகள். உள்ளூர்ப் பயணிகளுக்கு ஒரு விலை. வெளியூர்ப் பயணிகளுக்கு அதிக விலை என விற்பனை செய்யும் உணவு விடுதிகளில் உணவுப் பொருளின் தரம், சுவை கேள்விக் குறியாகவே உள்ளது. உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருள்களும், எண்ணெய்களும் காலவதியானவை என்பது அண்மையில் இங்கு நடந்த சுகாதாரத் துறை சோதனையின்போது வெட்ட வெளிச்சமானது. இவைகளை காவல்துறையும், சுகாதாரத் துறையும் கண்டுகொள்வதில்லை. அவர்களும் இதற்குத் துணை போவதாகத் தெரிகிறது.
கடற்கரைக்குச் சென்று அப்பாடா என்று நிம்மதியாகக் கடலை ரசிக்கலாம் என்றால், கடற்கரை முழுவதும் மனிதக் கழிவுகள் மற்றும் குப்பைகள் நிரம்பி, சுற்றுலாப் பயணிகளை விரட்டியடிக்கிறது. இங்குள்ள தமிழன்னை பூங்கா, காட்சி கோபுரம் என பல இடங்களிலும் பணம் கொடுத்தே உள்ளே சென்றாலும் குடிநீர் வசதியோ, கழிவறை வசதியோ அறவே இல்லை. சில கட்டண கழிவறைகளிலும் பல மடங்கு கட்டணம் வசூலித்தும், சுத்தம் மற்றும் சுகாதாரம் பேணப்படுவதில்லை.
இதேபோல் ஈவ்டீசிங், பிக்பாக்கெட் போன்ற தொந்தரவுகளுக்கும் கடற்கரையில் பஞ்சமில்லை. அண்மையில் வட்டக்கோட்டைக்குச் சுற்றுலா சென்ற வெளி நாட்டினரைகூட விட்டு வைக்கவில்லை. அழகிய பெண்களை தங்களது செல்போன்கள் மூலம் படமெடுத்தும், கடற்கரையில் குளிக்கும் பெண்களை ரசிப்பதற்கும், அவர்களுக்குத் தெரியாமல் செல்போன் மூலம் படமெடுப்பதில் உள்ளூரைச் சேர்ந்த சில கும்பல் தொடர்ந்து ஈடுபட்டு வருவதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.
இதைப் போன்ற குறைபாடுகளை சுட்டிக்காட்டி சமூக நல ஆர்வலர் லால் மோகனை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “கடற்கரை அருகில் கட்டடங்கள் வருவது தடுக்கப்பட வேண்டும். ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்த இயற்கையான மணல் புற்றுகள், சுனாமி வேகத்தைத் தடுக்க வல்லவை. அதைத் தகர்த்து கல் சுவர் கட்டி வருவது தாழ்ந்த பகுதியான கன்னியாகுமரிக்குத் தேவையில்லாதது. கடற்கரைகள் மிக அசுத்தமாக இருக்கின்றன. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லை. முதலில் அவர்களுக்கு அடிப்படை வசதியை செய்துகொடுக்க வேண்டும். கன்னியா-குமரிக்கு வந்துவிட்டு ஊர் திரும்பும் சுற்றுலாப் பயணிகள், திருப்தியாகச் செல்வது இல்லை. அந்த அளவுக்குப் பணம் பறிக்கும் செயல்கள் நடக்கின்றன. சுற்றுலாப் பயணிகளிடம் அநியாயமாகப் பணம் பறிக்கும் செயல்களை போலீஸாரும் சுற்றுலாத் துறை அதிகாரிகளும் தடுக்க வேண்டும்,” என கருத்துத் தெரிவித்தார்.
இதே குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தும், கன்னியா குமரியில் இந்த நடவடிக்கைகள் ஏன் எடுக்கப் படவில்லை? என்ற கேள்வி, குமரி மாவட்ட மக்கள் ஒவ்வொருவரின் மனதிலும் எழுகிறது!
*
‘
ஜனனி